

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா, டபல்கண்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் 4 மாத குழந்தையுடன் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை குழந்தை தொட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்தது. பெற்றோர் இருவரும் வீட்டின் கதவை திறந்து வைத்த நிலையில் வெளியே சென்றனர்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய், அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறியது. உடலில் அனைத்து இடங்களிலும் கொடூரமாக கடித்ததால் குழந்தை கதறி துடித்தது. வெளியே சென்ற பெற்றோர் குழந்தையின் கதறல் சத்தம் கேட்டு பதறிக்கொண்டு உள்ளே வந்தனர். அங்கு குழந்தையை ரத்த வெள்ளத்தில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் மரணம் நாய்க்கடியால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.