

பெங்களூரு
கர்நாடகாவின் பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சாமி தரிசனம் செய்ய வந்தவர்களுக்கு சாப்பிட பிரசாதம் வழங்கப்பட்டது. 400-க்கும் மேற்பட்டோர் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட நிலையில், அதில் சிலருக்கு வாந்தி, மயக்கம், டையோரியா போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
இதனை தொடர்ந்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏறக்குறைய 60 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களுக்கு நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் தேவனஹள்ளியில் உள்ள முதன்மை சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்களை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் உடல்நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர் என பெங்களூரு கிராமப்புற மாவட்ட சுகாதார அதிகாரி லக்கா கிருஷ்ணா ரெட்டி கூறினார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மூத்த மாவட்ட சுகாதார அதிகாரிகள் உடனடியாக சென்று, பிரசாதத்தின் ஒரு பகுதியை சேகரித்து அதனை தடய அறிவியல் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் கிடைத்த பின்னரே இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்று தெரிய வரும். அதனை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை நடந்து வருகிறது. இதுபற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.