கர்நாடகாவில் கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது

கலபுரகி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகாவில் கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது
Published on

பெங்களூரு,

கலபுரகி புறநகர் பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அந்த இளம்பெண் சிகிச்சைக்காக கலபுரகி டவுனில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இளம்பெண்ணுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு இளம்பெண் தூங்கி கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஒரு வாலிபர் இளம்பெண்ணின் துணிகளை அகற்றி உள்ளார். பின்னர் இளம்பெண்ணை அந்த வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் தூங்கி கொண்டிருந்த இளம்பெண் திடுக்கிட்டு விழித்தார்.

பின்னர் தனக்கு அருகே வாலிபர் நிற்பதையும், தனது ஆடைகள் விலகி இருப்பதையும் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார். இதனால் தூங்கி கொண்டிருந்த சக நோயாளிகள் எழுந்தனர். உடனே அங்கிருந்து அந்த வாலிபர் ஓடினார். பின்னர் நோயாளிகளும், காவலாளியும் அந்த வாலிபரை மடக்கி பிடித்தாகள். பின்னர் அவர் பிரம்மாபுரா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவரது பெயர் பின்டு (வயது 29) என்று தெரிந்தது.

மேலும் அவர் தனியார் ஆம்புலன்சில் டிரைவராக வேலை செய்து வருவதாகவும், அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை அழைத்து வரும் வேலையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதன் காரணமாக ஆஸ்பத்திரி ஊழியர்களுடன், அவருக்கு நல்ல பழக்கம் இருந்ததால், நள்ளிரவில் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து இளம்பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. கைதான பின்டு மீது பிரம்மாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com