கர்நாடகா: 5-க்கும் மேற்பட்ட கோர்ட்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மங்களூரு
கர்நாடகாவில் உள்ள மங்களூரு மாவட்ட கோர்ட்டுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுபற்றி நகர காவல் ஆணையாளர் சுதீர் குமார் ரெட்டி கூறும்போது, வெடிகுண்டு மிரட்டல் செய்தி கிடைத்ததும் உடனடியாக மங்களூரு மாவட்ட கோர்ட்டு வளாகத்திற்கு போலீசார் சென்றனர்.
கோர்ட்டில் இருந்து வழக்கறிஞர்கள், பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. விரிவாக சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இதனை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என போலீசார் உறுதி செய்தனர். மங்களூரு வடக்கு காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கு பதிவாகி உள்ளது.
இதேபோன்று, கர்நாடக ஐகோர்ட்டின் தார்வாத் கிளை, தார்வாத் மாவட்ட கோர்ட்டு, மாண்டியா, குடகு, ஹாவேரி உள்ளிட்ட கோர்ட்டுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. சோதனைக்கு பின்னர் அது புரளி என தெரிய வந்துள்ளது.

