

கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 18-ந்தேதி அந்த மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அன்று மதியம் 1.30 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்திற்கு சென்று பின்னர், ஹெலிகாப்டரில் மாயாபூர் செல்வார். இஸ்கான் கோவிலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். 2 மணிநேரம் கோவிலில் செலவிடுவார்.
அவர் இஸ்கானில் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகுரின் 152-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். மத்திய கூட்டுறவு துறை மந்திரியாகவும் உள்ள அமித்ஷாவின் தலைமையின் கீழ், மேற்கு வங்காளத்தில் பரந்த அளவிலான, கட்டமைப்பு சீர்திருத்தங்களை கடந்த சில ஆண்டுகளாகவே கூட்டுறவு அமைச்சகம் செய்து வந்துள்ளது.
அந்த துறையை வலுப்படுத்தி வந்துள்ளதுடன், அதிக வெளிப்படை தன்மை கொண்ட மற்றும் நவீனப்படுத்தப்பட்ட ஒன்றாகவும் மாற்றி உள்ளது என அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.