

பெங்களூரு,
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வரும் செவ்வாய்க்கிழமை டெல்லி செல்கிறார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம், வாரிய தலைவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவரது காவேரி இல்லத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று திடீரென நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தன.
இந்த சந்திப்பின்போது, டெல்லி பயணத்தின்போது பேச்சு நடத்தவுள்ள மந்திரிசபை விரிவாக்கம், வாரிய தலைவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மந்திரிசபையில் 4 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப முதல்-மந்திரி முடிவு செய்துள்ளார்.
அத்துடன் எடியூரப்பா ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட வாரிய தலைவர்களை நீக்கிவிட்டு, கட்சிக்காக உழைக்கும் நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று பசவராஜ் பொம்மைக்கு பா.ஜனதா மேலிடம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வாரிய தலைவர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.