

பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சி அமைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.
தங்கள் கட்சியின் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.50 கோடி வீதம் ரூ.1,000 கோடி வழங்க பா.ஜனதா முயற்சி செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல். ஏ.க்கள் வரை இந்த சட்டசபை கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று தகவல்கள் வெளியானது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 6-ந் தேதி (நேற்று) துவங்கியது. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, ஆடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டார். அந்த ஆடியோவில், கர்நாடக மாநில பாஜக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான பி.எஸ்.எடியூராப்பாவும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ நங்கனகவுடாவின் மகன் ஷார்னாவும் பேசுவது இடம் பெற்றுள்ளது. அதில், ரூ.25 லட்சமும், மந்திரி பதவியும் உங்கள் தந்தைக்கு தருவதாக எடியூரப்பா பேரம் பேசுவதாக இடம் பெற்றுள்ளது.