

பெங்களூரு:
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. படிப்பிற்கான பொது நுழைவு தேர்வு கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்துகொண்ட ஏராளமான மாணவர்கள் செல்போன்களை பயன்படுத்தியும், முன்னாள் மாணவர்களின் உதவியுடனும் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பி.எச்டி. படிப்பிற்கான பொது நுழைவு தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என கூறி மாணவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி இருந்தனர்.
இதற்கிடையே பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பி.எச்டி. பொதுநுழைவு தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிடகோரி கர்நாடக ஐகோர்ட்டில் மஞ்சுநாத் என்பவர் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி அசோக் கினகி அமர்வில் நடைபெற்றது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர் அவர் கூறுகையில் தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மறுதேர்வு நடத்துவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.