கர்நாடகா: பட்டாசு கடை தீ விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு; முதல்-மந்திரி இரங்கல்

கர்நாடகாவில் பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது.
கர்நாடகா: பட்டாசு கடை தீ விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு; முதல்-மந்திரி இரங்கல்
Published on

பெங்களூரு,

கர்நாடகா மற்றும் தமிழக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளி வளைவு அருகே பட்டாசு கடை மற்றும் குடோன் ஒன்று உள்ளது. இதனை ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்த நவீன் என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை 3.15 மணியளவில் கடையில் திடீரென தீ பிடித்து, மளமள என்று நாலாபுறமும் பரவியது. இதனை கண்டு கடை உரிமையாளர் நவீன் மற்றும் கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், பட்டாசு கடை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். கடைக்குள் சிலர் சிக்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த தீ விபத்தில் பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 இரு சக்கர வாகனங்கள், 2 பிக்கப் வேன்கள் மற்றும் 1 சரக்கு மினி லாரி ஆகியவை தீயில் கருகின. பட்டாசுக்கடையின் பக்கத்தில் உள்ள 2 மதுபான கடைகள், டீ கடையும் சேதம் அடைந்தன.

இந்த சம்பவத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், பெங்களூரு நகரில் அனேகல் பகுதியருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர் என அறிந்து ஆழ்ந்த வேதனையடைந்து உள்ளேன்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு நாளை சென்று ஆய்வு செய்ய உள்ளேன். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கல்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com