

பெங்களூரு,
கர்நாடகாவின் மங்களூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் எரிபொருள் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் டேங்கரில் எரிவாயு நிரப்பப்பட்டிருந்தது.
அந்த லாரி உப்பினங்காடி பகுதிக்கு வந்தபோது எதிர்பாராத விதமாக டேங்கரின் மூடி திறந்து கொண்டது. இதனை அறியாத ஓட்டுனர் லாரியை தொடர்ந்து ஓட்டிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், மங்களூரு எரிபொருள் மற்றும் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகளும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அந்த பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவர்கள் யாரும் நெருப்பு பற்ற வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டார்கள். தனியார் நிறுவன ஊழியர்களின் அலட்சியப்போக்கு குறித்து அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.