கர்நாடக அரசு கவிழ்ந்தது: ஜனநாயகமும், நேர்மையும் தோல்வி அடைந்து விட்டன - ராகுல்காந்தி கருத்து

கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததன் மூலம் ஜனநாயகமும், நேர்மையும் தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கர்நாடக அரசு கவிழ்ந்தது: ஜனநாயகமும், நேர்மையும் தோல்வி அடைந்து விட்டன - ராகுல்காந்தி கருத்து
Published on

புதுடெல்லி,

கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்தார். இந்த கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் பதவி விலகியதால், அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 95 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அங்கு புதிய அரசை அமைக்க பா.ஜனதா முயன்று வருகிறது.

கர்நாடக அரசு கவிழ்ந்ததால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் அடைந்து உள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணியை, தங்கள் அதிகாரத்துக்கு அச்சுறுத்தலாகவும், இடையூறாகவும் சிலர் கருதினர். கூட்டணிக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் அவர்கள் இந்த ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்தே தங்கள் சுயநலனுக்காக அதை கவிழ்க்க முயன்று வந்தனர்.

அவர்களின் பேராசை தற்போது வென்று இருக்கிறது. ஆனால் ஜனநாயகமும், நேர்மையும் தோற்றுப்போய் இருக்கிறது. அதைப்போல கர்நாடக மக்களும் தோல்வியடைந்து உள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com