கர்நாடகாவில் 5 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை

File image
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் கர்நாடகாவில் 5 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஊழல் செய்து சொத்து சேர்த்த அதிகாரிகள் யார்? யார்? என கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த லோக் ஆயுக்தா அமைப்பு, அவர்களின் வீடுகள், அவர்களது அலுவலகங்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்த வாரண்ட் பெற்று நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
அதன்படி, பெங்களூரு, பெலகாவி, சித்ரதுர்கா, ராய்ச்சூர், பாகல்கோட் ஆகிய 5 இடங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையை இன்று அதிகாலை முதல் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
சோதனை நடந்து வரும் அதிகாரிகள் பட்டியல் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று லோக் ஆயுக்தா போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






