

டெல்லி,
காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்சினை இன்றி பகிர்ந்து கொள்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 2018-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
அப்போதிலிருந்து தற்போது வரை இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதி நீர் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றன. இந்த வகையில் மேலாண்மை ஆணையம் 49 முறை கூட்டப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மே மாத பங்கீடாக காவிரி ஆற்றில் இருந்து 2.5 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.