

பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளில் இருந்து 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அரசு கடும் நெருக்கடியில் உள்ளது. ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரித்தால், அரசு தானாகவே கவிழ்ந்து விடும்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று மதியம் தொடங்கியது. கூட்டத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி, சட்டசபையில் அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள். பலரும் பலவாறு பேசுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது நல்லது என கூறினார்.