பெங்களூருவில் விதான சவுதாவை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் மீது போலீஸ் தடியடி

கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் விதான சவுதாவை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு உண்டானது.
பெங்களூருவில் விதான சவுதாவை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் மீது போலீஸ் தடியடி
Published on

மத்திய அரசு புதிதாக தேசிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு

இதற்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த புதிய கல்வி கொள்கையை கர்நாடகத்தில் மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. இது நடப்பாண்டு முதலே மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.ஆனால் இந்த கல்வி கொள்கை மாணவர்களை பாதிக்கும் என்று கூறி அதனை திரும்ப பெற வேண்டும் என்று சித்தராமையா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.அதுபோல் மங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மாணவர் அமைப்பினர் இந்த புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது தேசிய கல்வி கொள்கைக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் எதிராக மாணவர் அமைப்பினர் கோஷம் எழுப்பினர். மேலும் மேலும் புதிய கல்வி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் கைகளில் ஏந்தி பிடித்திருந்தனர்.

மாணவர் அமைப்பினர் ஊர்வலம்

இதனை தொடர்ந்து பெங்களூரு விதான சவுதாவை (சட்டசபை கட்டிடம்) முற்றுகையிட மாணவர் அமைப்பினர் ஊர்வலமாக புறப்பட்டனர். தற்போது கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதனால் சட்டசபை வளாகத்திற்குள் நுழைய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர் அமைப்பினர் விதானசவுதாவை முற்றுகையிட வந்தது பற்றி தகவலறிந்த போலீசார் அங்கு வந்து மாணவர் அமைப்பினரை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் முன்னேறி செல்ல முயன்றனர். இதனால் மாணவர் அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் தடியடி

மேலும் விதான சவுதாவுக்கு ஊர்வலமும் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், மாணவர் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் மாணவர் அமைப்பினர் மீது தடியடி நடத்தினர். இதன்காரணமாக மாணவர் அமைப்பினர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.சிதறி ஓடிய மாணவ-மாணவிகள் தங்கள் கைகளில் இருந்த பதாகைகள், காலணிகள், பைகளை போட்டுவிட்டு சென்றனர். இதனால் அந்த இடம் முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது.

பின்னர் பாராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் மைசூரு வங்கி சர்க்கிளில் பரபரப்பு உண்டானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com