மதவழிபாட்டு தலத்தில் கணவன் அளித்த புகார்: நடுரோட்டில் பெண் மீது கொலைவெறி தாக்குதல்

அங்கு கூடியிருந்த ஆண்கள், நடுரோட்டில் வைத்து சபீனா பானு மீதும் அவரது உறவினர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்
மதவழிபாட்டு தலத்தில் கணவன் அளித்த புகார்: நடுரோட்டில் பெண் மீது கொலைவெறி தாக்குதல்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் தவரிகேரா பகுதியை சேர்ந்தவர் ஜமால் அகமது. இவரது மனைவி சபீனா பானு (வயது 38). இதனிடையே கடந்த 7ம் தேதி சபீனா பானுவின் உறவினர்களான நஸ்ரின் மற்றும் பையாஸ் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மாலை நேரத்தில் வீட்டில் சபீனாபானும் அவரது உறவினர்களும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்கு வந்த ஜமால் அகமது தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார்.

மேலும், மனைவி சபீனா மீது அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் 3 பேரும் விளக்கம் அளிக்க நேரில் வருமாறு மசூதியில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 9ம் தேதி சபீனா பானு மற்றும் அவரது உறவினர்கள் மசூதி முன் ஆஜராகியுள்ளனர்.

அப்போது அங்கு கூடியிருந்த ஆண்கள், நடுரோட்டில் வைத்து சபீனா பானு மீதும் அவரது உறவினர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். மசூதிமுன் நடுரோட்டில் வைத்து கற்கள், கட்டைகளை கொண்டு சபீனா பானு மற்றும் அவரது உறவினர்கள் மீது கொலைவெறி தாகுதல் நடத்தப்பட்டது. இதில், சபீனா பானு படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சிலர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் படுகாயமடைந்த சபீனா இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதல் நடத்திய 6 பேரை கைது செய்தனர். மேலும், சிலர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com