நண்பர்கள், அரசியல் பிரமுகர்களுடன் மனைவியை உல்லாசமாக இருக்க வற்புறுத்திய வாலிபர்

பணத்தேவை அதிகரித்த போதெல்லாம் அவர் தனது மனைவியை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நண்பர்கள், அரசியல் பிரமுகர்களுடன் மனைவியை உல்லாசமாக இருக்க வற்புறுத்திய வாலிபர்
Published on

பனசங்கரி,

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பனசங்கரியை சேர்ந்தவர் யுனிஸ் பாஷா(வயது 33). கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி இவருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் முடிந்தது. திருமணமான சில நாட்களில் அந்த பெண் கர்ப்பமானார். இதை அறிந்த யுனிஸ் பாஷா மனைவிக்கு கருக்கலைப்பு செய்தார்.

இவ்வாறு 2 முறை அவர் மனைவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார். மேலும் அடிக்கடி வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் யுனிஸ் பாஷாவும், அவரது பெற்றோரும் சேர்ந்து, அந்த பெண்ணை கொடுமைப்படுத்தினர். குறிப்பாக மாமனாருக்கு மசாஜ் செய்யக்கூறி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் யுனிஸ் பாஷாவுக்கு பணத்தேவை அதிகரித்த போதெல்லாம் அவர் தனது மனைவியை சித்ரவதை செய்து வந்தார். அதுமட்டுமின்றி மனைவியை அரசியல் பிரமுகர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தி உள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததும் தலாக் கூறியுள்ளார். இதுவரை 6 முறை தலாக் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி தனது தாயுடன் வசித்து வந்தார். கடந்த வாரம் அந்த பெண், தனது கணவர் யுனிஸ் பாஷாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரை யுனிஸ் பாஷா துப்பாக்கி காட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபற்றி அந்த பெண் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் மற்றும் பனசங்கரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பனசங்கரி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் யுனிஸ் பாஷாவுக்கு ரவுடிகளுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் பல பெண்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். இதை மனைவி தட்டி கேட்டபோது அவரை, யுனிஸ் பாஷா மிரட்டி வந்தது தெரியவந்தது. மேலும் அரசியல் பிரமுகர்கள், நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து பனசங்கரி போலீசார் யுனிஸ் பாஷா மற்றும் அவரது தந்தை சிந்த் பாஷா, தாய் பஹீன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com