டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜர்: இன்று மாலைக்குள் விசாரணையை முடிக்க திட்டம்?

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை எழுப்ப சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து விஜய்யிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன்படி கடந்த 12-ந்தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்காக விஜய் ஆஜரானார். இதன் பின்னர், 2-ம் கட்ட விசாரணைக்காக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு நாளை (ஜன.19-ம் தேதி) டெல்லியில் மீண்டும் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்காக 2-வது முறையாக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், சிபிஐ முன்பு 2-வது முறையாக இன்று விஜய் ஆஜரானார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அவரிடம் இன்றும் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், இன்றுடன் விசாரணையை முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.






