

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு புனித யாத்திரையாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். ஆங்கில புது வருட பிறப்பினை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி பவன் பகுதியருகே கோவில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர்.
அவர்களில் ஒரு பிரிவினரிடையே அதிகாலை 2.45 மணியளவில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின், தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுள்ளனர். இதில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பலர் கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மீது பக்தர்கள் மிதித்து சென்றுள்ளனர். இதனால், பலர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில், 12 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். 13 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் நாராயணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என சமூக சுகாதார மையத்தின் மருத்துவர் கோபால் தத் கூறியுள்ளார். எனினும், இந்த எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சோக சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். காஷ்மீரில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
இதேபோன்று, காஷ்மீரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்த நபர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா அறிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர். சம்பவ பகுதிக்கு மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் நேரில் செல்ல இருக்கிறார். இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் கொரோனா பாதிப்பு, 12 பேர் உயிரிழப்புக்கு இடையே மாதா வைஷ்ணவி தேவி கோவில் புனித யாத்திரை மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்த புனித யாத்திரையில் பக்தர்கள் மீண்டும் திரளாக ஒன்றுகூடி கலந்து கொண்டுள்ளனர்.