

புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக மிகவும் பதற்றமான நிலையை நீடித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த பரூக் அப்துல்லா. அவருடைய மகன் உமர் அப்துல்லா அதே ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தார். கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரில் கல்வீச்சு சம்பவத்திற்கு இடையே பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது பரூக் அப்துல்லா வெற்றி பெற்றார்.
மாநில மற்றும் மத்திய அரசுக்கு எதிராக இருவரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜம்முவை சேர்ந்த எம்.பி.யும், மத்திய மந்திரியுமான ஜிஜேந்திர சிங் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் ஆட்சியை இழந்ததும் பாதி பிரிவினைவாதிகளாகிவிட்டனர் என கடுமையாக தாக்கி உள்ளார்.
ஜிஜேந்திர சிங் இதுபோன்ற விமர்சனங்களை முன்வைப்பது இது ஒன்றும் புதியது கிடையாது. அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டு இந்திய அரசியலமைப்புக்கு உட்பட மறுக்கிறார்கள். காஷ்மீரில் பிரிவினைவாதம் ஒரு சித்தாந்தம் கிடையாது, மாநிலத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அவர்கள் ஆட்சியை இழக்கும் போது பாதி பிரிவினைவாதிகளாகிவிடுகின்றனர். அவர்கள் முதல் மந்திரியாக இருக்கும் போது உள்துறைக்கு சவால் விடும் அளவிற்கு செல்வார்கள், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய அரசு தாக்குதல் நடத்ததாது ஏன்? என கேள்வி எழுப்புவார்கள்.
அவர்கள் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டதும் ஒரே இரவில் ஞானம்பெற்றவர்களாகிவிடுவார்கள், என ஜிஜேந்திர சிங் விமர்சனம் செய்து உள்ளார்.
நான் பந்தயம் கட்டுகின்றேன் அவர்கள் மீண்டும் பதவிக்கு வரட்டும் மறுபடியும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என சத்தியம் செய்வார்கள். இதுதான் பிரிவினைவாதிகள் மற்றும் பாதி பிரிவினைவாதிகளின் குணம் என விமர்சனம் செய்து உள்ளார் ஜிஜேந்திர சிங்.