

டேராடூன்
பிரதமர் மோடி உத்தராகண்ட் மாநிலத்திற்கு இன்று வருகை தந்துள்ளார். இந்த பயணத்தில், ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாகியுள்ள டேராடூன்-டெல்லி பசுமை வழி சாலையை திறந்து வைக்கிறார். இந்த 6 வழிகள் கொண்ட பசுமை வழி சாலையானது 210 கி.மீ. நீளம் கொண்டது. இதனால், டேராடூன் மற்றும் டெல்லி இடையேயான பயணம் 5 மணிநேரத்தில் இருந்து இரண்டரை மணிநேரம் என்ற அளவுக்கு குறைய கூடும்.
இந்த நிலையில், டேராடூன் நகருக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடிக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கான மந்திரி நிதின் கட்காரி மற்றும் உத்தராகண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி ஆகியோர் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க திரளான மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கூட்டத்தினரின் முன் பிரதமர் மோடி பேசும்போது, தேவபூமி என அழைக்கப்படும் இந்த பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை குவிப்பது அதன் புனித தன்மைக்கு தீங்கு ஏற்படுத்தும். அதனால் தேவபூமியை, நம்முடைய புனித தலங்களை தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
அரித்துவாரில் அடுத்த ஆண்டு கும்பமேளா நடைபெற உள்ளது. அப்போது இந்த நம்பிக்கைக்கான சங்கமத்தில் தெய்வீக தன்மை, பிரமாண்டம் மற்றும் தூய்மை ஆகியவற்றை செயல்படுத்துவதில் எந்த பணியையும் நாம் விட்டு விட கூடாது என்றும் கூறினார்.