

கொல்கத்தா
மேற்கு வங்காளத்தின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் தொலைபேசி வழியே பேசினேன். அவருக்கு என்னுடைய முழு அளவிலான ஆதரவை தெரிவித்தேன்.
இந்திய ஜனநாயகத்தில் மிக முக்கிய போர்களில் ஒன்றான, கடினம் வாய்ந்த ஒரு போரில் அவர் போராடி வருகிறார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உள்பட அனைத்து அமைப்புகளையும் தவறாக பயன்படுத்தியபோதும், மோடிஜி தோல்வியடைவார் என அதில் தெரிவித்து உள்ளார். வருகிற தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
முதல் கட்ட தேர்தலுக்கு முன், பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி, தன்னுடைய தொகுதியில் அரசியல் பேரணி ஒன்றை நடத்த அனுமதி கோரிய நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தது.
இதற்கு அவர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார். ஒரு முதல்-மந்திரியாக இருக்கும் தனக்கு, சொந்த தொகுதியில் அரசியல் பேரணி நடத்த அனுமதி மறுத்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து அவர் கேள்வி எழுப்பினார்.
பிரதமரின் பேரணிக்கு 6 மணிநேரத்தில் நீங்கள் அனுமதி அளிக்கிறீர்கள். ஆனால், ஒரு முதல்-மந்திரியான என்னுடைய பேரணிக்கு அனுமதி மறுக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.