

புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா பாதிப்புகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 357 பேர் உயிரிழந்து உள்ளனர். இது ஒரு நாளில் மிக அதிக அளவாகும். டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறி வருகின்றன.
இந்நிலையில், டெல்லி அரசு கேட்டதற்கும் கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு டெல்லி முதல் மந்திரியும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து உள்ளார். ஆக்சிஜனை திட்டமிட்டு வழங்குவது என்பது இனி மாநில அரசுகளிடமே உள்ளது என மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்தன் இன்று கூறினார்.
இந்த சூழலில், டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கூடுதலாக உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கும்படி பிற மாநில முதல் மந்திரிகள் அனைவருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். எங்களுக்கு மத்திய அரசும் உதவி செய்து வருகிறது.
எனினும், எங்களுக்கு கிடைக்க கூடிய அனைத்து உதவிகளும் போதிய அளவில் இல்லை என நிரூபிக்கும் வகையில் டெல்லியில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.