கேரளா: 35 முக்கியத் துறைகளுடன் ஆதிக்கம் செலுத்தும் முதல்-மந்திரி வி.டி. சதீசன்

மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு மிக முக்கிய துறைகளான உள்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரளா: 35 முக்கியத் துறைகளுடன் ஆதிக்கம் செலுத்தும் முதல்-மந்திரி வி.டி. சதீசன்
Published on

திருவனந்தபுரம்

கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களை கைப்பற்றியது. இதில் 63 இடங்களில் வென்ற காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜ.க. 3 தொகுதிகளிலும் வென்றது. காங்கிரசின் இந்த வெற்றி மூலம் 10 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.

எனினும், காங்கிரசில் முதல்-மந்திரியாக யார் பதவி வகிப்பது என்பதில் இழுபறி நீடித்தது. அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் எம்.பி.யான கே.சி.வேணுகோபால், கடந்த பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி. சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

10 நாட்கள் இழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல்-மந்திரியாக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதனையடுத்து அவர், கவர்னர் ஆர்.வி. அர்லேக்கரை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சியமைக்க அழைக்கும்படி கேட்டு கொண்டார். அதற்கேற்ப கவர்னரும் அழைப்பு விடுத்தார்.

இதனை தொடர்ந்து, முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கேரள முதல்-மந்திரியாக வி.டி. சதீசன் பதவி ஏற்றார். அவருக்கு ரகசிய காப்பு பிரமாணமும், பதவிப்பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, காங்., மூத்த தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா, கே.முரளீதரன், ஏ.பி.அனில்குமார், சன்னி ஜோசப் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள சூழலில், முதல்-மந்திரி வி.டி. சதீசன் நிதி, சட்டம், பொது நிர்வாகம் மற்றும் துறைமுகங்கள் உள்ளிட்ட 35 முக்கிய துறைகளை தன் வசம் வைப்பதன் மூலம் ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் தனது வலுவான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்.

அதே நேரத்தில், மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு மிக முக்கியத் துறைகளான உள்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையும், கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக் (IUML) தலைவர் பி.கே. குஞ்ஞாலிகுட்டிக்கு தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜவுளித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், முஸ்லிம் லீக் கட்சியின் என். சம்சுதீனுக்கு பொது கல்வித்துறையும், காங்கிரஸ் மாநில தலைவர் சன்னி ஜோசப்பிற்கு மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையும், கே. முரளீதரனுக்கு சுகாதாரம் மற்றும் தேவஸ்வம் துறையும் பகிர்ந்தளிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ துறைகள் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com