கேரளா: குளத்திற்குள் பாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் பிரசார வாகனம்

பிரசார வாகனத்தில் இருந்த ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் வரும் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவின் நெய்யாற்றிங்கரை அருகே உள்ள திருப்புரம் பஞ்சாயத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்தாஸ் என்பவர் தனது ஆம்னி வேனை பிரசார பணிகளுக்காக பயன்படுத்தி வந்தார். இன்று மதியம் அந்த ஆம்னி வேனை மோகன்தாசின் ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வேனில் மோகன்தாஸ் இல்லை.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வேன் சாலையோரம் இருந்த குளத்திற்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் பிரசார வாகனம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. அப்பகுதியை சேர்ந்த மக்கள் நீரில் மூழ்கிய வேனை கயிறு கட்டி இழுத்து மேலே கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.






