கேரள வெள்ளத்தில் தனது உயிரை கொடுத்து முதியவரை காத்த நீச்சல் வீரர்

பலத்த நீரோட்டம் காரணமாக ராஜேஷ் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
நீச்சல் வீரர் ராஜேஷ்
Published on

கண்ணூர்,

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மீந்துள்ளி பகுதியில் காரியங்கோட்டு ஆற்Ru வெள்ளத்தில் சிக்கிய 61 வயது முதியவரைத் தப்ப வைக்க, தான் அணிந்திருந்த லைப் ஜாக்கெட்டை கழற்றி கொடுத்துவிட்டு, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீச்சல் வீரர் ராஜேஷ் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய முதியவர்

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 36 வயது ராஜேஷ், ஒரு தொழில்முறை நீச்சல் மற்றும் சாகச பயிற்சி வீரர் ஆவார். கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி, கண்ணூர் காரியங்கோட்டு ஆற்று வெள்ளத்தில் பென்னி என்ற 61 வயது முதியவர் சிக்கி கொண்டார்.

தியாகம்

தகவலறிந்து நண்பர்களுடன் மீட்புக்கு சென்ற ராஜேஷ், வெள்ளத்தில் தத்தளித்த முதியவரை காப்பாற்ற துணிச்சலாக ஆற்றில் குதித்தார். முதியவர் உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக, தான் அணிந்திருந்த உயிர்காக்கும் உடையை கழற்றி அவருக்கு மாட்டினார். முதியவர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், பலத்த நீரோட்டம் காரணமாக ராஜேஷ் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

சோகத்தில் முடிந்த தேடுதல் வேட்டை

தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பிறகு ராஜேஷின் உடல் மீட்கப்பட்டது. இவர் ஏற்கனவே 2018 கேரள வெள்ளம் மற்றும் 2024 வயநாடு நிலச்சரிவின் போது நூற்றுக்கணக்கான உயிர்களை மீட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறர் உயிர் வாழ தன் உயிரை தியாகம் செய்த வீரனுக்கு ஒட்டுமொத்த கேரளாவும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com