

திருவனந்தபுரம்,
கேரளாவில், ஓணம் மற்றும் முகரம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கில் இருந்து தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில், கொரோனா குறித்த கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ், தலைமை செயலாளர் ஜாய் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-
மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. நேற்று 24 ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 18 சதவீதத்தை கடந்துள்ளதால் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கடைகள், வணிக மால்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.