

திருவனந்தபுரம்,
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் குருவாயூர் தொகுதி பாஜக வேட்பாளரும், மகிளா மோர்ச்சா மாநிலத் தலைவருமான நிவேதிதா சுப்ரமணியன், கண்ணூர் மாவட்ட பாஜக தலைவரும், தலச்சேரி தொகுதி பாஜக வேட்பாளருமான ஹரிதாஸ் ஆகியோரின் வேட்புமனுக்கள் பரிசீலனையில் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதில் பாஜக வேட்பாளர்கள் ஹரிதாஸ், நிவேதிதா சுப்பிரமணியன் வேட்புமனுவில், ஏ படிவத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் கையொப்பம் இல்லை என்பதால் அதிகாரிகள் நிராகரித்தனர்.
அதேபோல இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தனலட்சுமியின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையே பாஜக வேட்பாளர்கள் ஹரிதாஸ், நிவேதிதா சுப்பிரமணியன் இருவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியதோடு, மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.