

புதுடெல்லி,
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு 6 வார காலம் அவகாசம் அளித்து கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு கூறியது.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவில் 5 வாரங்கள் முடிந்துவிட்டன. ஆனால், மத்திய அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது.
இந்த நிலையில், காவிரி வழக்கு இறுதி தீர்ப்பில் விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பிப்ரவரி-16 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கிய 30 டி.எம்.சி தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேரள அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.