

திருவனந்தபுரம்,
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அகாலி நகரில் பழங்குடியின இளைஞர் ஒருவர் கடைகளில் உணவுப் பண்டங்களைத் திருடியதாக அப்பகுதிவாசிகள் வியாழக்கிழமை குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கூட்டாகச் சேர்ந்து அவரைத் தாக்கினர். அதன் பின் அவரை போலீஸாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். எனினும், போலீஸார் அந்த இளைஞரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இதனிடையே, மேற்கண்ட இளைஞரை ஒரு கும்பல் அடிக்கும் காட்சிகள் கேரளத்தில் சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தச் சம்பவத்துக்கு பழங்குடியின ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
பழங்குடியின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்ககு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது கேரளத்தின் முற்போக்கு சமூகம் மீது படிந்துள்ள கறை என்று அவர் விமர்சித்தார். பழங்குடியின இனத்தைச்சேர்ந்தவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.