

திருவனந்தபுரம்,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் நேற்றும் கனமழை பெய்தது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன.
இந்தநிலையில், கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலசரிவால் 11 பேரை காணவில்லை என்றும், 41 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1,155 நிவாரண முகாம்களில் 1,65,538 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 2,857 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 3,393 எக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.