சிறுநீரக முறைகேடு வழக்கு: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு

சிறுநீரக முறைகேடு வழக்கில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
சிறுநீரக முறைகேடு வழக்கு: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களிடம் ஏழ்மையை பயன்படுத்தி சட்டவிரோதமாக சிறுநீரக தானம் பெற்று மோசடி நடந்துள்ளது. தற்போது திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சில மருத்துவமனைகளிலும் இதுபோன்ற மோசடிகள் நடந்ததாக தகவல்கள் வருகின்றன.

இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சிறுநீரக மோசடி குறித்து விசாரணை நடத்த தென்மண்டல ஐ.ஜி. பிரேமானந்த் சின்ஹா தலைமையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன், கார்த்திகேயன், அர்விந்த் ஆகியோர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் ரீஷ் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா அடங்கிய அமர்வு முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது நாமக்கல் கிட்னி முறைகேடு வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை. சிறப்பு புலனாய்வுக்குழுவை எதிர்க்கவில்லை, அதிகாரி நியமனத்தை மட்டுமே எதிர்க்கிறோம். நாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளின் பெயர்களில் இருந்து தேர்வு செய்து குழுவை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் சிறுநீரக முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்த ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனவும் ஐகோர்ட்டு நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழுவை மாற்ற முடியாது என நீதிபதிகள் கூறி வழக்கு விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com