பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்

வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்
Published on

ஹாசன்:-

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வரதட்சணை கொடுமை

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா டவுன் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் குருராஜ் (வயது 34). இவரது மனைவி ஹேமாவதி (28) இவரது சொந்த ஊர் சிக்கமகளூரு ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குருராஜுக்கும், ஹேமாவதிக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.இந்த நிலையில் திருமணம் முடிந்த நாள் முதலே குருராஜ், வரதட்சணை கேட்டு மனைவி ஹேமாவதியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். நாளுக்கு நாள் இந்த கொடுமை அதிகரித்து வந்துள்ளது. இதனால் ஹேமாவதி மனம் உடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

கழுத்தில் காயம்

இந்த நிலையில் நேற்று காலை குருராஜ், வீட்டில் இருந்த 2 பிள்ளைகளையும் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்த குருராஜ் தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி அழுதுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் ஹேமாவதி தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், சென்னராயப்பட்டணா டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் விரைந்து வந்து தூக்கில் தொங்கிய ஹேமாவதி உடலை மீட்டனர். அப்போது அவரது கழுத்தில் காயங்கள் இருந்தன. இதையடுத்து அவரது உடலை போலீசார் பிரேதப் பரிசாதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

நாடகமாடிய கணவர் கைது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் கணவர் குருராஜை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக அவர் கூறியுள்ளார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

இதில், வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் ஹேமாவதியை கழுத்தை நெரித்து கொன்றதையும், போலீசில் சிக்காமல் இருக்க ஹேமாவதி உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து குருராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண்ணை அவரது கணவரே கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com