கொல்கத்தா: பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் - சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

கொல்கத்தாவில், பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.
கொல்கத்தா: பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் - சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் சுமார் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்ட நடை மேம்பாலத்தை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சமீபத்தில் திறந்து வைத்தார். ஆனால் இந்த பாலம் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே கழிவுகள், வெற்றிலை கறை போன்றவற்றால் மாசுபாடு அடைந்தது. இது மம்தா பானர்ஜிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

எனவே தலைநகரை சுத்தமாக வைப்பதற்காக கடும் நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தார். அதன்படி தலைநகரில் குப்பை கொட்டுவோருக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் கொல்கத்தா மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்த மசோதா மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய மசோதாவின்படி கொல்கத்தாவில் பொது இடத்தில் குப்பை கொட்டுவோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும். முன்னதாக இந்த சட்டத்தின் படி, அங்கு குப்பை கொட்டுவோருக்கு ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரையே அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இற்கிடையே பொது இடத்தில் குப்பை கொட்டுவோர் மற்றும் துப்புவோரை கண்டுபிடிக்க 11 நபர் குழு ஒன்றையும் மம்தா பானர்ஜி அமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


X

Daily Thanthi
www.dailythanthi.com