

கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை முறையாக நடத்தவில்லை என்று கூறி கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க சென்றது. அப்போது சி.பி.ஐ. அதிகாரிகளை போலீசார் கைது செய்ததும், அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக ராஜீவ் குமார் முன்ஜாமீன் பெற்றார்.
இதனிடையே 28-ந் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. மேலும் அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜீவ் குமார் நேற்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக அவர் சி.பி.ஐ.க்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது விடுமுறையில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.