

புதுடெல்லி,
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கம்ப்யூட்டரில் சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு அணுமின் நிலையம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய அணுமின் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலைய கம்ப்யூட்டரில் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டது உண்மை தான். செப்டம்பர் 4-ந்தேதி இந்த தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டதும் உடனடியாக அவசரகால கம்ப்யூட்டர் பொறுப்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிபுணர்கள் உடனடியாக விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர் நிர்வாக பணிகளுக்காக ஒருவர் பயன்படுத்துவது என கண்டுபிடித்தனர். மின்நிலைய நெட்வொர்க்கில் இருந்து அந்த கம்ப்யூட்டர் தனிமைப்படுத்தப்பட்டது. நெட்வொர்க் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதனால் அணுமின் நிலைய செயல்பாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது என்று கூறப்பட்டுள்ளது.