கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க மாட்டோம்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமா திட்டவட்டம்

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்றும், முழுஅடைப்பு போராட்டம் நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும் என்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க மாட்டோம்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமா திட்டவட்டம்
Published on

பெங்களூரு:

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இயல்பாகவே மழை உள்ளிட்ட பிற காரணங்களால் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்திற்கு செல்லும். இன்னும் ஆயிரம் கனஅடி நீர் நாம் திறக்க வேண்டும். இந்த நீரை திறக்க மாற்று ஏற்பாடு செய்வோம். இனி எக்காரணம் கொண்டும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி நீர் திறக்க மாட்டோம்.

மேகதாது திட்டத்தை செயல்படுத்துமாறு பா.ஜனதாவினர் இங்கு கேட்கிறார்கள். இங்கு கேட்பதால் என்ன பயன்?. அவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு கூட மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக பேசியுள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். மாநிலத்தின் நலனுக்காக பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதாக அவற்றின் தலைவர்கள் சொல்கிறார்கள்.

அப்படி என்றால் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு பிரதமரிடம் அவர்கள் கூற வேண்டும். அவர்கள் அனுமதி பெற்று தந்தால் மூன்றே ஆண்டுகளில் அணையை கட்டி முடிக்கிறேன். தமிழகத்திற்கு கேட்ட அளவு நீரை திறக்க உத்தரவிட முடியாது என்று ஒழுங்காற்று குழு கூறிவிட்டது. தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க மீண்டும் ஒரு முறை முழு அடைப்பு நடத்துவது ஏன்?.

கன்னட அமைப்பினருடன் நாங்கள் உள்ளோம். 29-ந் தேதி மீண்டும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வாத்தகம் பாதிக்கும். பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் முழு அடைப்பு நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com