மடிகேரி தசரா விழாவுக்கு ரூ.2 கோடி நிதி; முதல்-மந்திரியிடம் குடகு மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

மடிகேரி தசரா விழாவுக்கு ரூ.2 கோடி நிதி வழங்க கோரி முதல்-மந்திரி சித்தராமையாவை குடகு மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
மடிகேரி தசரா விழாவுக்கு ரூ.2 கோடி நிதி; முதல்-மந்திரியிடம் குடகு மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை
Published on

குடகு, செப்.24-

மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலகப்புகழ் பெற்றது. அதுபோல் சிவமொக்கா, மண்டியா, குடகு உள்ளிட்ட மாவட்டங்களிலும் தசரா விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடகு மாவட்டம் மடிகேரியில் நடைபெறும் தசரா விழாவுக்கும் மாநில அரசு தான் நிதி ஒதுக்கி வருகிறது. இந்த நிலையில் இவ்வாண்டு மாநிலத்தில் பருவ மழை பொய்த்துவிட்டது. அதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அதன் காரணமாக இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை மிக எளிமையாக கொண்டாட அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பொன்னண்ணா, மந்தர்கவுடா, மடிகேரி தசரா சமிதி தலைவர் அனிதா பூவய்யா, செயல் தலைவர் பிரகாஷ் ஆச்சார்யா, பொது செயலாளர் ராஜேஷ் யல்லப்பா உள்ளிட்டோர் நேற்று பெங்களூருவுக்கு சென்றனர். அவர்கள் பெங்களூருவில் உள்ள விதானசவுதாவில் முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்தனர். அப்போது அவர்கள் மடிகேரி தசரா விழாவுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்-மந்திரி சித்தராமையா இதுபற்றி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com