விமான விபத்து விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை - விமானிகள் சங்கம் கண்டனம்

உண்மையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென விமானிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி,
கடந்த12-ம் தேதி, குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் 'ஏஐ 171' விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து, வெடித்துச் சிதறியதில் விமானத்தில் இருந்த 241 பேர் உள்பட 260 பேர் பலியாகினர்.
இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கையில், விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், ரன் என்பதில் இல்லாமல் கட்-ஆப் என்ற நிலையில் இருந்ததாகவும், இதனால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நிறுத்தப்பட்டு, இரு என்ஜின்களும் செயலற்றுப் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், விமானிகள் பேசிக்கொண்டதாக ஆடியோவில் பதிவான சில தகவல்களும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய விமானிகள் சங்கத் தலைவர் சாம் தாமஸ் வெளியிட்ட அறிக்கையில், "விமான விபத்து தொடர்பான விசாரணையின் போக்கும், தகவலும், விபத்துக்கு விமானிகளின் தவறே காரணம் என்பது போல உள்ளது. இந்த அனுமானத்தை ஆரம்பத்திலேயே நாங்கள் நிராகரிக்கிறோம். அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் இல்லை. வெளிப்படையான, நேர்மையான, உண்மையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.