

புதுடெல்லி,
லடாக் எல்லையில் இந்திய-சீன படைகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை தொடர்ந்து குறை கூறி வருகிறார். இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதாக அவரும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும் கூறும் குற்றச்சாட்டை மத்திய அரசு ஏற்கனவே மறுத்து உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடியை தாக்கும் வகையில் ராகுல் காந்தி நேற்று இந்தியில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புனிதமான இந்திய தாய் மண்ணை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இதுதான் பிரதமர் மோடியின் ஆட்சியில் நடந்து உள்ளது என்று கூறி இருக்கிறார்.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியதாக அரசு தவறான தகவலை தெரிவிப்பதாகவும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து இந்தியா படைகளை விலக்கியது நமக்கு பாதகமானது என்றும் பத்திரிகையில் பாதுகாப்பு துறை நிபுணர் ஒருவர் எழுதியுள்ள கட்டுரையையும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் இணைத்து உள்ளார்.