

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் சப்தர்கஞ்ச் அருகே வீர் பல்புவா கிராமத்தை சேர்ந்தவர் சந்திர வர்மா (வயது 32). இவர் மாவட்ட கோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார்.
இதனிடையே, சந்திர வர்மாவுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலப்பிரச்சினை நிலவி வந்தது. தந்தையின் சொத்தை உறவினர் அபகரித்துவிட்டதாக சந்திர வர்மா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சந்திர வர்மா நேற்று மாலை கோர்ட்டில் இருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த 6 பேர் கொண்ட கும்பல் சந்திர வர்மாவை சரமாரியாக தாக்கினார்.
பின்னர், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சந்திர வர்மாவை அந்த கும்பல் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச்சென்றது. இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த சந்திர வர்மா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து, படுகாயமடைந்த சந்திர வர்மாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.