மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் கைது: கடித விவரத்தை போலீசார் வெளியிடுவதா? சட்ட நிபுணர்கள் கண்டனம்

கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டு ஆதரவாளர்களின் கடித விவரத்தை போலீசார் வெளியிட்டதற்கு சட்ட நிபுணர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் கைது: கடித விவரத்தை போலீசார் வெளியிடுவதா? சட்ட நிபுணர்கள் கண்டனம்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டியதாக தெரியவந்ததை தொடர்ந்து, மாவோயிஸ்டு ஆதரவாளர்களான டெல்லியைச் சேர்ந்த ரோனா வில்சன், ஐதராபாத்தைச் சேர்ந்த வரவர ராவ் உள்ளிட்ட 5 பேரை சமீபத்தில் மராட்டிய மாநில போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ரோனா வில்சன் மாவோயிஸ்டு தலைவர் ஒருவருக்கு அனுப்பிய இ-மெயிலில் (மின் அஞ்சல்) உள்ள தகவலை மும்பையில் கூடுதல் டி.ஜி.பி. பரம்பீர் சிங் நேற்று முன்தினம் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வக்கீல்கள் சிலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி மும்பை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.டி.கோடே கூறுகையில், விசாரணை தொடக்க நிலையில் இருக்கும் போது கிடைக்கும் ஆதாரங்களை போலீசார் குற்றப்பத்திரிகையுடன் கோர்ட்டில்தான் தாக்கல் செய்ய வேண்டுமே தவிர இதுபோன்று வெளியிடக்கூடாது என்று தெரிவித்தார்.

மூத்த வக்கீல் மிகிர் தேசாய் கூறுகையில், போலீசுக்கு கிடைத்த ஆதாரம் என்று கூறி, இ-மெயிலில் உள்ள தகவலை பத்திரிகையாளர்களிடம் வெளியிடுவது தவறானது என்றும், இது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அவதூறை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் சில சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், வழக்கு தொடர்பாக தங்களுக்கு கிடைக்கும் ஆவணங்களில் உள்ள விவரங்களை போலீசார் வெளியிடலாமா? கூடாதா? என்பதற்கு விதிமுறைகள் எதுவும் இல்லை என்று கூறினார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com