

புதுடெல்லி,
டெல்லி மாநில பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், பிரபல வக்கீலுமான அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டு மற்றும் டெல்லி ஐகோர்ட்டில் 50-க்கும் மேற்பட்ட பொது நல மனுக்களை தாக்கல் செய்தவர். தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த நிலையில் அவர் பிரதமர் அலுவலகத்துக்கும், தலைமை தேர்தல் கமிஷனுக்கும் ஒரு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளார்.
அதில், நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியாக பட்டப்படிப்பை நிர்ணயிக்க வேண்டும். 70 வயதுக்கும் மேற்பட்டோரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. 2 குழந்தைகள் கொள்கையை அறிவிப்பதுடன் அதை மீறுபவர்கள் தேர்தலில் போட்டியிடுவதையோ, கட்சிகள் தொடங்குவதையோ அனுமதிக்கக் கூடாது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும், தேர்தல் கமிஷனும் எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் 2 குழந்தை கொள்கையை பின்பற்றி நடப்பவருக்கே அரசு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும். சலுகைகள், மானியங்கள் பெறுவதற்கும் இதை கட்டாயமாக்கவேண்டும் எனவும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.