

புதுடெல்லி,
இந்தியாவில் போலி சிம் கார்டுகள் மூலம் சமூக விரோதிகள் மற்றும் பயங்கரவாதிகள் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக செல்போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
புதிய இணைப்பு பெறுபவர்கள் மட்டுமின்றி ஏற்கனவே உபயோகப்படுத்தி வரும் சந்தாதாரர்களும் ஆதார் எண்ணை தொலை தொடர்பு நிறுவனங்களிடம் சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஆதார் எண் இணைக்கப்படாத செல்போன் எண்களின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது. பின்னர் மார்ச் மாதம் என காலக்கெடு நீடிக்கப்பட்டது. இதனையடுத்து செல்போன் எண் பயன்படுத்தும் நபர்கள் தங்களுடையை ஆதார் எண்ணை கொடுத்து இணைத்து வருகிறார்கள். தொலை தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தும் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.
இதற்கிடையே மத்திய, மாநில அரசுக்களின் நல உதவி திட்டங்களை பெறுவதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செல்போன் எண்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்ற டெலிகாம் துறை அறிவிப்பிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஜே. செல்லாமேஸ்வர் மற்றும் எஸ். அப்துல் நசீர் அடங்கிய பெஞ்ச் முன்வந்தது. ஆனால் அவசரமாக மனுவை நாளை விசாரிக்க பெஞ்ச் மறுத்துவிட்டது, இதுபோன்ற வழக்குகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெஞ்ச் முன்னதாக உள்ளதாகவும் பெஞ்ச் குறிப்பிட்டு உள்ளது. ஆதார் தொடர்பான பிற வழக்குகள் விசாரணை நடைபெறும் 30-ம் தேதிக்கு இம்மனுவையும் விசாரணைக்கு எடுக்க வகைசெய்யுமாறு பதிவாளரிடம் பெஞ்ச் கேட்டுக் கொண்டது.