

புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வு 5-ந் தேதி தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் மக்களவை இன்று கூடியதும், அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி பிரச்சினையை வலியுறுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். எங்களுக்கு நீதி வேண்டும் என்று அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர். தொடர்ந்து அமளி நீடித்ததால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார். பின்னர் அவை மீண்டும் கூடியதும், அமளி நீடித்தது. இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் இதே நிலை தான் நீடித்தது. வன்கொடுமை சட்ட விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி கடும் அமளியில் ஈடுபட்டன. உறுப்பினர்கள் அமளியால் அதிருப்தி அடைந்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, இது ஜனநாயக படுகொலை என்றார். அதிமுக மற்றும் திமுக எம்.பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி பதாகைகளை கையில் ஏந்தியவாறு அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, பிரதமர் மோடி தலித் விரோதி என பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டனர். இருக்கைக்கு திரும்புமாறு வெங்கையா நாயுடு விடுத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டு உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.