இந்த அமர்வில் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சபை நடவடிக்கைகள் இல்லை- சபாநாயகர் ஓம் பிர்லா

இந்த அமர்வில் மக்களவை 74 மணி நேரம் 46 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டது என சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.
Image courtesy : ANI
Image courtesy : ANI
Published on

புதுடெல்லி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-இல் தொடங்கி நடைபெற்று வந்தது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.

இன்று காலை அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அதே விவகாரத்தை கிளப்பின. தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவை பகல் 12 மணி வரையும் மக்களவை தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் தொடர் அமளியால் முன்னதாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:-

சபை 74 மணிநேரம் மற்றும் 46 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டது. மொத்த சபை நடவடிக்கை 22 சதவீதமே ஆகும். அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட ஓபிசி மசோதா உள்பட மொத்தம் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சபைக்குப் பங்களித்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமருக்கும் நன்றி.

இந்த அமர்வில் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சபை நடவடிக்கைகள் நடக்கவில்லை என்ற உண்மையால் நான் வேதனையடைகிறேன்.

எம்.பி.க்கள் சபையின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்று நான் எப்போதும் எதிர்பார்க்கிறேன். சபையில் விவாதங்கள், உடன்பாடுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்தன, ஆனால் அதன் கண்ணியம் பாதிக்கப்படவில்லை.

அனைத்து எம்.பி.க்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன், நாடாளுமன்ற மரபுகளுக்கு ஏற்ப சபை நடத்தப்பட வேண்டும் அதன் கவுரவம் காக்கப்பட வேண்டும்.

கோஷமிடுதல் மற்றும் பதாகைகளை உயர்த்துவது நமது நாடாளுமன்ற மரபுகளின் பகுதி அல்ல. எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து நிற்க வேண்டும் என கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com