

பெங்களூரு,
தாசில்தார் அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ.500 கோடிக்கு தனியார் நிலத்தை டிஜிட்டல் கையெழுத்து மூலம் மாற்றி முறைகேடு செய்தது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா, தேவனஹள்ளி தாசில்தார் அலுவலகங்களில் சமீபத்தில் லோக் அயுக்தா துணை நீதிபதி வீரப்பா தலைமையில் போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.
தாசில்தார் அலுவலகங்களில் சிக்கிய ஆவணங்களை கைப்பற்றி லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல கோடி ரூபாய் நில முறைகேடு நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது, தேவனஹள்ளி தாலுகாவில் சன்ன அமானிகெரே மற்றும் பைஜாபுரா கிராமங்களில் உள்ள தனியாருக்கு சொந்தமான 62 ஏக்கர் நிலத்தை, வேறு சில நபர்களின் பெயரில் பட்டா, பிற பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக அரசின் 'சாப்ட்வேர்' மூலமாக தனியாருக்கு சொந்தமான நிலத்தின் ஆவணங்களில் டிஜிட்டல் கையெழுத்தை மாற்றி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நிலத்துக்கான அரசு மதிப்பு ரூ.104 கோடி ஆகும். ஆனால் தற்போது அந்த கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ரூ.8 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் 62 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடிக்கு மேல் உள்ளதாகவும்.
அந்த நிலத்தை தொட்டபள்ளாப்புரா முன்னாள் உதவி கமிஷனர் துர்காஸ்ரீ மற்றும் அதிகாரி மனோஜ் தான் தனியாருக்கு சொந்தமான நிலத்தை வேறு சிலரின் பெயரில் மாற்றி மோசடி செய்திருந்தனர்.
இதையடுத்து, துணை நீதிபதி வீரப்பா உத்தரவின் பேரில் துர்காஸ்ரீ, மனோஜ் மற்றும் சில அதிகாரிகள் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசார ணைக்கு ஆஜராகவும் லோக் அயுக்தா நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.