செல்போனில் நீண்ட நேரம் பேச்சு: ஆத்திரத்தில் மனைவியை கத்திரிக்கோலால் குத்திய கணவர்

வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து மனைவியை கணவர் சரமாரியாக குத்தி உள்ளார்.
செல்போனில் நீண்ட நேரம் பேச்சு: ஆத்திரத்தில் மனைவியை கத்திரிக்கோலால் குத்திய கணவர்
Published on

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஜே.பி.நகரில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், அந்த பெண் அலுவலக வேலை தொடர்பாக வீட்டில் வைத்து தன்னுடன் பணியாற்றும் ஆண் ஊழியருடன் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார்.

இதனால், அந்த நபருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருக்கலாம் என கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர் அடிக்கடி தகராறும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் அந்த பெண், செல்போனில் அலுவலக வேலை தொடர்பாக ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அந்த சமயத்தில் ஆத்திரம் அடைந்த கணவர், வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் புட்டேனஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை வாலிபர் கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து புட்டேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com