

ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ராஜவுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 11 உயிரிழந்ததுடன், பல வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இரவு முழுவதும் நீடித்த கனமழையால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கியிருந்த வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மீட்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், மழை தொடரும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும், நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிப்பு நிலவரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மற்றும் முதல் மந்திரியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக பேசி கேட்டறிந்தார். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.