லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த வேண்டியதில்லை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த வேண்டியதில்லை என கூறி அதற்கான மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று நிராகரித்து உள்ளது.
லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த வேண்டியதில்லை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
Published on

புதுடெல்லி

லாட்டரி சீட்டு விற்பனையாளர்களுக்கு சேவை வரி விதிக்க அனுமதிக்க கோரி மத்திய அரசு 2013-ம் ஆண்டில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், வரி விதிக்க தங்களுக்கு உரிமையுள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதனை நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. இதில், அவர்களுடன் எந்தவித ஏஜென்சிக்கும் தொடர்பு இல்லை. இதனால், லாட்டரி விற்பனையாளர்களுக்கு சேவை வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும், அரசியல் சாசனத்தின் பட்டியல் 2-ல் வகைப்படுத்தப்பட்டபடி மாநில அரசு விதிக்கும் கேளிக்கை வரியை அவர்கள் செலுத்துவது தொடரும் என்றனர்.

லாட்டரி சீட்டுகள் விற்கும் நிறுவனம் மற்றும் அவற்றை வாங்குபவர்களுக்கு இடையே நடக்கும் பரிமாற்றங்களுக்கு சேவை வரி விதிக்க முடியாது என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து அவர்கள், இதுபற்றிய முன் வாதங்களின்படி, மத்திய அரசு மற்றும் பிறர் தாக்கல் செய்த வரி விதிப்புக்கான கோரிக்கைக்கு எந்தவித தகுதியும் இருப்பதுபோல் நாங்கள் கண்டறிய முடியவில்லை. அதனால், இந்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்படுகின்றன என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு, சிக்கிம் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், இதன்படி, லாட்டரிகள் மீது மாநில அரசே வரி விதிக்க முடியும் என்றும் மத்திய அரசால் சேவை வரி விதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com